கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள நரசாபூர் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு தைவானிய நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
விஸ்ட்ரான் என்ற தைவான் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து சிலர் அலுவலகத்தை சூறையாடியதோடு, வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தியும், கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதால், நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.
இதையடுத்து தகவலறிந்து அங்கு உள்ளூர் காவல்துறையினர் சென்றபோது, கூட்டத்தில் ஒருவர் போலீஸ் ஜீப் மீது கல்லை எறிந்தார். அதன் பிறகு காவல்துறையினர் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டினர்.
பின்னர் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பளம் வழங்க மறுத்ததால், ஊழியர்கள் நிறுவனத்தை அடித்து உடைத்ததோடு, தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது