திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் “ஒண்டிக்கு ஒண்டி” பட நாயகி நடிகை மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தி, தெலுங்கு, தமிழ் மொழித் திரைப்படங்களில் மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற திரைபடத்தில் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
யோகேஷ்குமார் மகிபால் சிங் என்பவரிடம் நீண்டநாள் நட்பாக பழகிவந்த நிலையில் அண்மையில் பேச்சை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையின் வெர்சோவா பகுதியில் நேற்று இரவு அவரிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், இதை ஏற்க மறுத்ததால் யோகேஷ்குமார் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சொகுசு காரில் வந்த யோகேஷ்குமார், தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றார்.
நடிகை மால்வியின் அடி வயிற்றிலும், இரு கைகளில் 3 முறை கத்திக்குத்து விழுந்தது.
நடிகை மால்வி துபாயிலிருந்து திரும்பிய ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. திங்களன்று இரவு 9 மணியளவில், அவர் வடக்கு மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சந்தேக நபர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
யோகேஷ்குமார் ஒரு ஆடி காரில் வந்து, நடிகை மால்வியை நிறுத்தி, அவருடன் பேசுவதை ஏன் நிறுத்தினார் என்று கேள்வி எழுப்பினார். “நான் உங்களுடன் பேச விரும்பவில்லை. நீங்கள் ஏன் என்னைத் தொடர்கிறீர்கள்? என்னைப் பின்தொடர வேண்டாம்” என்று நடிகை கூறினார்.
பின்னர் யோகேஷ்குமார், அவரை மூன்று முறை குத்திவிட்டு ஓடிவிட்டார் என்று போலீசார் நடிகையை மேற்கோள் காட்டி தெரிவித்தனர்.
புகாரின்பேரில் கொலை முயற்சி, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து யோகேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.