நாம் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மௌனம் காக்கவில்லை- ஜீவன் தொண்டமான் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 18, 2020

நாம் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மௌனம் காக்கவில்லை- ஜீவன் தொண்டமான்

 பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான  முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.



ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயம் பெற்றுத் தருவோமென அவர் உறுதியளித்துள்ளார்.


கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட பூண்டுலோயா- ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


குறித்த நிகழ்வில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


தோட்டப்பகுதிகளில் 384 கிலோமீற்றர் அளவான வீதிகள் புனரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்மிடம் உறுதியளித்துள்ளார்.


ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


நாம் மௌனம் காக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். நிச்சயம் அந்த தொகை பெற்றுக்கொடுக்கப்படும்.


மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் செய்வோம். நாம் எல்லா விடயங்களையும் ஊடகங்களிடம் காண்பித்து செய்வதில்லை.


அதேவேளை, பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவிக்கும் கலாச்சாரத்தையும் நாம் குறைத்துக்கொள்வோம். அரசியல்வாதிகளுக்காக செலவிடும் அந்த பணத்தை குழந்தைகளின் கல்வி தேவைக்கு பயன்படுத்துங்கள். பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக நாம் கோபமடையப்போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.