விசேட சுற்றிவளைப்பில் இன்று நாட்டில் 1642 பேர் வரையில் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 17, 2020

விசேட சுற்றிவளைப்பில் இன்று நாட்டில் 1642 பேர் வரையில் கைது

திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர்.


இதற்கமைய கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது , சட்டவிரோத ஆயுதங்கள், போதைப் பொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும் , பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய 1642 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 364 சந்தேக நபர்களுள் 219 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 153 கிராம் 537 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து ஒரு கிலோ 98 கிராம் 679 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடன் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரிடமிருந்து 13 கிராம் 160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 281 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 3857 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களில் ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இதன்போது இரண்டு ரிபீடர் ரக துப்பாக்கிகளும், தன்னியக்க தோட்டக்கள் ஒன்பதும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெடிப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 17 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 275 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 719 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இணங்க கடந்த புதன்கிழமை முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 1642 சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.