டிட் டாக்கில் வலை: 10க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பணம் பறித்தவர் சிக்கினார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 19, 2020

டிட் டாக்கில் வலை: 10க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பணம் பறித்தவர் சிக்கினார்!

கொரோனாவுக்கு ஓட்டலில் தனிமைப்படுத்தியபோது 10 க்கும் மேற்பட்ட பெண்களுடன் நட்பாக பழகி ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அத்துடன், என்ஜினீயரிடம் ரூ.12 லட்சத்தையும் ஆட்டையை போட்டுள்ளார்.


சென்னை வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், துபாயில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

அதே ஓட்டலில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராஜன் தெருவைச்சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (23) என்பவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது விக்னேஷ், உதயகுமார் இடையே நட்பு ஏற்பட்டது. அப்போது உதயகுமாரிடம், விக்னேஷ் தான் பெரிய தொழிலதிபர். தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உதிரிபாகங்கள் விற்பனை செய்து பல கோடி வருமானம் வருவதாக கூறினார்.



தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தபிறகும் விக்னேஷ் அடிக்கடி வேளச்சேரியில் உள்ள உதயகுமார் வீட்டுக்கு வந்து பழகியதாகவும், அப்போது தன்னுடைய தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதை நம்பிய உதயகுமார், ரூ.12 லட்சம் வரை விக்னேசிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 மாதங்களாக லாபத்தில் பங்கு தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் விக்னேஷ் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் விக்னேசின் செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த உதயகுமார், வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விக்னேசை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து இருந்த விக்னேசை வேளச்சேரி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில், 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்தி விட்ட விக்னேஷ், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை கொண்டவர். இதனால் சில கால் சென்டர் நிறுவனங்களில் வேலை பார்த்து உள்ளார். டிக்-டாக்கில் நடித்து தகவல் போடும்போது அதில் வரும் பெண்களுடன் பழகி உள்ளார். அந்த பெண்களின் கணவன்மார்கள், வெளிநாட்டில் வேலை செய்வது தெரிந்தால் அவர்களுடன் சகோதரன் முறையில் பேசி பழகி, அவர்களிடம் உடல் நலம் இன்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், குணமடைந்து வீடு திரும்பிய உடன் பணம் தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி உள்ளார்.



சில பெண்களிடம் காதலிப்பதாக சொல்லி பழகி பணம் பறித்து உள்ளார். 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு ஏமாற்றி பெற்ற பணத்தில் பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பெண்கள் வீட்டுக்கு விமானங்களில் சென்று அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பணத்தை செலவழித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

டிப்-டாப் உடையுடன், கையில் 4 விரல்களில் தங்கம் போல் தோற்றமளிக்கும் கவரிங் மோதிரங்களை அணிந்தும், நுனி நாக்கு ஆங்கில பேச்சை வைத்தும் பெண்களை கவர்ந்து ஏமாற்றி உள்ளார்.



கைதான விக்னேஷிடம் இருந்து ரூ.3 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.