கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளமை தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது அவர் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி தெரிவித்திருக்கின்றார்.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக அதிகாரி இன்று அதிகாலை 1.30 அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதேவேளை, தமது இராஜதந்திர பணியாளர்கள் இலங்கைக்கு வருகைதரும் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழையும் இராஜதந்திரிகள் உட்பட்ட எவரும் கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனையை நிராகரிக்க முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரி பரிசோதனைகளை நிராகரித்து இலங்கைக்குள் நுழைந்தது தொடர்பில் தமக்கு யாரும் முறையிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்