கேரளாவில் கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விராட் கோஹ்லி வேதனை தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளது. இப்பகுதியில் தேசிய பூங்காவும் உள்ளது. இங்கு ஏராளமான அரிய வன விலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி மலப்புரம் நிலம்பூர் வன அதிகாரியான மோகன கிருஷ்ணன் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காட்டு யானை ஆற்றிற்குள் நின்றுக்கொண்டிருந்தது. அந்த யானையின் நடவடிக்கையை பார்த்தபோது அதன் உடலில் காயம் இருப்பதை மோகன கிருஷ்ணன் உணர்ந்தார்.
அருகில் சென்று பார்த்தபோது யானை அடிக்கடி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி உயர்த்துவதை பார்த்தார். அப்போதுதான் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்தார்.
அந்த பெண் யானைக்கு 15 வயது இருக்கும். இது குறித்து விசாரித்தபோது, இந்த யானை அடிக்கடி ஊருக்குள் வந்து வாழை, கரும்பு உட்பட விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்லுமாம்.இதனால் கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கெடுத்துள்ளனர். இதை யானை சாப்பிட்டபோது வெடி வெடித்துள்ளது. இதல் வாய் சிதறி பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது, இந்த சம்பவம் இந்தியா முழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன்.
தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.