பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரிவை நோக்கி நகர்கின்றது.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த 24 மணித்தியாலத்தில் 70பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இதேபோல, கடந்த 8ஆம் திகதி 243பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை 9ஆம் திகதி 80ஆக இருந்தது.
ஆனால், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையில் கடந்த மாத ஆரம்பத்துடன் ஒப்பிடும் போது, பெரிதளவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏப்ரல் மாத ஆரம்பத்தில் சராசரியாக 500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 100இற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் 312பேர் மட்டுமே வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையும் கடந்த 9ஆம் திகதியுடன் (579பேர்) ஒப்பிடுகையில் கணிசமான அளவு குறைந்துள்ளது.
இதன்படி பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 176,970ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,380ஆகும்.
மேலும், மருத்துவமனைகளில் 94,373பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 56,217பேர் குணமடைந்துள்ளனர். 2,776பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதனிடையே, பிரான்ஸில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) எளிதாக்கப்படுகின்றன.