வடகொரியா தலைநகர் பியாங் யாங்கில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அலை மோதுகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. அதனால் முழு ஊரடங்கை பல நாடுகள் அமுல்படுத்தி உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியானவுடன் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வர்த்தக நிலையங்களில் மக்கள் குவிந்தனர். ஆனாலும் வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர். பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முடிந்து விட்டன. இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறி களுக்கு தொடக்கத்தில் தட்டுப் பாடு நிலவியது. அதன்பின் மற்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தலைவர் கிம் ஜாங் உடன் உடல் நிலை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஆகிய பிரச்சினைகள் காரணமாக மக்கள் பீதியடைந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிப்பதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியதுமே கடந்த ஜனவரி மாதம் தனது நாட்டு எல்லையை வடகொரியா மூடிவிட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத ஆராய்ச்சி, ஏவுகணை சோதனை போன்ற நடவடிக்கைகளால் வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகள் உள்ளன. எனவே, அங்கு உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது புதிதல்ல. தற்போது கொரோனா தொற்று உள்ளதால், இந்தப் பிரச்சினை பெரிதாகி உள்ளது என்கின்றனர்.