![](https://www.thaarakam.com/wp-content/uploads/2020/03/download-1-5.jpg)
மட்டக்களப்பு-ஆயித்தியமலை பகுதியில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில் தூக்கத்திலிருந்த பெண் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அப்பெண் படுகாயமடைந்த நிலையில் நேற்று (3) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெடியமடு கிராமத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தஇளம் பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதால் தனது மூன்று பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்பில் இவர் வசித்துவந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தாயும் பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்த வேளையில் வீட்டின் கூரை வழியாக ஓடுகளை கழட்டிக்கொண்டு வீட்டினுள் இறங்கிய மர்ம நபர், உறக்கத்திலிருந்த பெண்ணை கூரிய கத்தியினால் தலையிலும் கையிலும் வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை காவல்துறையினர் மற்றும் மட்டக்களப்பு குற்றத் தடயவியல் காவல்துறையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்