ஜனாதிபதித் தேர்தலை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய, தேசிய பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தின் தமிழ் பிரிவுக்கான இணைப்பாளர் என்.கமல்ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கத்தினால் பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் பதவி உருவாக்கப்பட்டு, அமைச்சரவையில் அனுமதிபெறப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரித்து, அதற்கு அமைவாக விண்ணப்பம் கோரப்பட்டு அதனை தொடர்ந்து இரண்டு தடவைகள் நேர்முக தேர்வுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து கடந்த 2019-09-16ஆம் திகதியிடப்பட்டு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. அந்த நியமனத்தினை தேர்தலை காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்தார்கள்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த தடையினை நீக்கி நியமனத்தினை வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் அந்த நியமனத்தினை வழங்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.