உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிறிசேன பொய் சாட்சியம் வழங்கினார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 1, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிறிசேன பொய் சாட்சியம் வழங்கினார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடுதிரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இதுதொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பிரசாரம் செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் அரசாங்கம் இதுதொடர்பாக எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டோம்.

அவரது வாசஸ்தலத்துக்கு சென்று இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்போது, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் சிங்கப்பூரில் இருந்த உங்களுக்கு உடனடியாக நாடு திரும்ப முடியாமல்போனதற்கு காரணம் என்ன என கேட்டபோது, ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானத்தில் அன்றையதினம் ஆசனம் இருக்கவில்லை. அதனால்தான் வரமுடியாமல்போனது என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுதொடர்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரை பாராளுமன்ற விசாரணைக்குழுவுக்கு அழைத்து கேட்போதுஇ குறிப்பிட்ட தினத்தில் 20 க்கும் அதிகமான ஆசனங்கள் மீதமிருந்ததாக சாட்சியமளித்திருந்தார்கள். இந்த விடயங்கள் அறிக்கையில் எழுதப்பட்டிருக்கின்றன.

அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பொய் சாட்சியம் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்டுதான் அவர் இவ்வாறு செயற்பட்டாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அதனால் அரசாங்கம் இதுதொடர்பாக மைத்திரிபால சிறிசேனவை விசாரிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.