அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் – மஹிந்த! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 14, 2020

அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் – மஹிந்த!

அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார்.

தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் தீர்வினை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் மக்களுக்கான தீர்வினை இந்தியாவினால் வழங்க முடியாது. மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வினை இலங்கை அரசாங்கத்தினால் மாத்திரமே வழங்க முடியும்.

அத்துடன், சில தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இதுவே தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்க காரணமாகின்றது.

எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதனை தமிழ் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். அத்துடன், வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றினை அரசாங்கம் தொடர்ந்தும் செய்யும்.

13 பிளஸ் குறித்த எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை நான் கூறிக்கொள்கின்றேன். தமிழ் மக்களினால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.

அதேபோன்று வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இந்திய மீனவர்களின் இழுவைபடகுகள் காரணமாக வடக்கில் உள்ள மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முழுப்பொறுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைத்துள்ளேன்.

அத்துடன், எனது இந்திய விஜயத்தின்போதும் நான் இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்.

இதேவேளை, பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 அரச புலனாய்வாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை.

அதேபோன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவர்கள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. குறிப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கால எல்லை என்பன குறித்து அறிக்கை கோரியுள்ளேன்.

சில தமிழ் அரசியல் கைதிகள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே அறிக்கை கிடைத்ததன் பின்னரே அவர்கள் குறித்து தீர்மானிக்க வேண்டும்.

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாயினை ஐந்து வருடங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதாகவே உறுதிமொழி வழங்கிருந்தோம். அதை உடனடியாக நிறைவேற்றுமாறு கோருவது தவறானது.

எமது தற்போதைய அரசாங்கத்தில் ஏன் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லை என கேட்கின்றீர்கள். ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சரவையில் நியமிக்குமாறு எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பரிந்துரை செய்திருக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவும் தனக்கு அமைச்சுப் பதவி வேண்டாம். என கூறிவிட்டார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எமது தரப்பில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சுப் பதவியினை வழங்குவது குறித்து தீர்மானிப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.