34 புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரென வெளியாகிய செய்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.
இதன்போது, கடந்த பௌர்ணமி தினத்தன்று 34 புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரென சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அரசியல் கைதிகள் குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர், அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர்களில் பலரின் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் அவர்களின் விடுதலை தொடர்பாக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்