கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் எஸ்.எஸ்.எம்.ஷாபி, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச சேவை ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் ஊடாக அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில் குறித்த வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தி அதன் அறிக்கையை சமர்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரை கேட்டுள்ள போதிலும் இதுவரை குறித்த அறிக்கை கிடைக்கவில்லை என அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை மற்றும் வைத்தியர் ஷாபியின் கோரிக்கை ஆகியவை தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் தனது பரிந்துரையை முன்வைக்கும் வரை குறித்த வைத்தியரை கடமையில் இணைத்துக் கொள்வது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படாது என அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.