அரசாங்கத்தின் திட்டம் இதுதானா? அஸாத் சாலி அதிரடி தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 31, 2019

அரசாங்கத்தின் திட்டம் இதுதானா? அஸாத் சாலி அதிரடி தகவல்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்துபேரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலுக்கு செல்லவே அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

என்றாலும் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் நீதிமன்றம் தொடர்ந்து சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றது.

என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதனாலேயே ராஜித்த மற்றும் சம்பிக்கவுக்கு பிணை கிடைக்கப்பெற்றது.

அத்துடன் அரசாங்கத்துக்கு தேவையான முறையில் தீர்மானங்களை எடுக்க முடியாமல் இருப்பதாலே 19ஐ இல்லாமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்…

கடந்த அரசாங்கம் 19ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டுவந்து அங்கிகரித்துக்கொண்டதால் இன்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் இயங்கிவருகின்றன.நீதிமன்ற சுயாதீனம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. நீதிபதிகள் எந்த அச்சமும் இன்றி வழக்கு தீர்ப்புகளை வழங்க முடியுமான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனாலே கடந்த அரசாங்க காலத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் தொடர்பாக விமர்சனங்கள் வரவில்லை.

அத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பழிவாங்கும் செயலை ஆரம்பித்திருக்கின்றது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்யும்போது அதுதொடர்பில் பின்பற்றவேண்டிய எதனையும் கடைப்பிக்காமல் இரவு நேரத்தில் திடீரென கைதுசெய்திருக்கின்றது.

அதேபோன்று ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்ததற்கும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கும் சம்பந்தமில்லை. அதனால்தான் நீதிமன்றம் பிணைவழங்கி இருக்கின்றது.

அரசியலமைப்பின் 19ஆம் திருத்தம் காரணமாகவே நீதிமன்ற சுயாதீனத்தன்மை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 5பேரை சிறையில் அடைத்துவிட்டு பொதுத்தேர்தலுக்கு செல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்தார்.