திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு சென்ற சிறுமி ஒருவர் இன்று (10) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த வீ. கிஷோபிதா (13வயது) எனவும் தெரியவருகின்றது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது-காய்ச்சல் காரணமாக மருந்து எடுப்பதற்காக வருகை தந்திருந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாகவும், ஏற்கனவே காய்ச்சல் காரணமாக வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை தொடர்ச்சியாக காய்ச்சல் காணப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1733 டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இருந்தபோதிலும், டெங்கு தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.