திருகோணமலை பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் கொள்வனவு செய்த உணவில் தலைமுடி இருந்தமை வாடிக்கையாளருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் நேற்றைய தினம் பிற்பகல் அந்த உணவகத்தில் 1200 ரூபாய் பணம் செலுத்தி மூன்று கடலுணவு கொத்துரொட்டி பொதிகளை வாங்கியுள்ளார்.
அதில் ஒரு கொத்துரொட்டி பொதியில் தலைமுடி காணப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பொதியில் கருகிய உணவு காணப்பட்டுள்ளதாக குறித்த உணவினை பெற்றுக்கொண்ட நபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக குறித்த உணவக தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு வாடிக்கையாளர் வினவியபோது, உணவகத்தினர் வாடிக்கையாளரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதுடன் உணவுப் பொதியை எடுத்துவருமாறு பணித்துள்ளனர்.
வாடிக்கையாளர் உணவுப் பொதிகளுடன் சென்ற போது உணவகம் மூடப்பட்டமையால் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து உணவக முன்றலில் இருப்பதனை வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
அப்போது உணவகத்தினர் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து மீண்டும் கடும் சொற்களால் அவரை திட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.