எதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 21, 2019

எதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய

எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம் எனவும் இதனை நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ள கட்சியில் நாடாளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டும் காலம், அடுத்ததாக ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் ஆசன ஒதுக்கீடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் அதிகமாக பேசப்பட்டது.

இக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, தினேஷ் குணவர்த்தன, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, நிமல் சிறிபால.டி.சில்வா, அமீர் அலி, அஜித்.பி.பேரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இருவரின் பெயர்களும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் குறித்த சர்ச்சையும் இதன்போது எழுப்பப்பட்டது.

இதன்போது குறித்த கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்த சபாநயகர் கரு ஜெயசூரிய, “எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பது குறித்தும் யாரை தெரிவுசெய்ய வேண்டும் என்பது குறித்தும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேசி அர்த்தமில்லை.

இந்த விடயமானது குழுவின் விடயப் பரப்புக்கு உட்பட்டதும் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க் கட்சியாக நாடாளுமன்றத்தில் அமரவுள்ள நிலையில் யார் எதிர்க் கட்சித் தலைவர் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம். இதனை நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை” என சபாநாயகர் தெரிவித்தார்