முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜஐபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று (22) போராட்டம் இடம்பெற்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ் கல்வியங்காட்டிலுள்ள காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, ஐநா அமைதிப்படை வர வேண்டும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று, கோட்டாவை கைது செய், எங்கள் உறவுகள் எங்கே, சர்வதேசமே உடனடியாக கோட்டாவை கைது செய், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பக்கச் சார்பற்ற விசாரணையை நடாத்து, கோட்டா ஒரு உயிர் கொல்லி, எமது பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் வழங்க உனக்கு அருகதையில்லை ஆகிய கோசங்களை எழுப்பியிருந்தனர்.