தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக மாணவி 4 மாதம் கர்ப்பமடைந்த சம்பவம் பெரிய நீலாவணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணையில் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபரான சித்தப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் கர்ப்பம் தரித்துள்ள மாணவி கடந்த காலங்களில் பெரிய நீலாவணையில் தொடர்மாடி குடியிருப்பில் வாழ்ந்துள்ளார்.
சம்மாந்துறை மல்வத்தை தம்பி நாயகபுரம் பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் தொழில் செய்யும் திருமணமான சந்தேகநபர் குறித்த 16 வயது மாணவியுடன் தகாத உறவினை கொண்டு தலைமறைவாகி இருந்தார்.
இவ்வாறு மாணவி இடையிடையே மயக்கமடைந்துள்ளமையினால் தந்தையை இழந்துள்ள நிலையில் தாயுடன் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது மருத்துவ பரிசோதனையின் பின்னர் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறித்த சம்பவம் நான்கு மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற போதிலும் தற்போது கர்ப்பம் தரித்தமையினால் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடாக வந்துள்ளமை சுட்டிக்காட்டதக்கது.
மேலும் சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் மல்வத்தை தேவாலயம் ஒன்றிற்கு அருகாமையில் இன்று பொலிஸாரினால் கைதானார்.
கைதான சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேகநபர் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயின் ஒன்றுவிட்ட தங்கையின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எவரும் கண்டனக்குரல் எழுப்புவதில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளன.