சுகாதார தொண்டர்கள் விடயத்தில் அரசியல் தலையீடு: சுட்டிக்காட்டுகிறார் சத்தியலிங்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 6, 2019

சுகாதார தொண்டர்கள் விடயத்தில் அரசியல் தலையீடு: சுட்டிக்காட்டுகிறார் சத்தியலிங்கம்



சுகாதார தொண்டர்கள் விடயத்தில் அரசியல் தலையீடு இருக்கின்றமையே அவர்கள் இன்று வீதியில் நிற்பதற்கும் தற்கொலை முயற்சிக்கும் காராணம் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுகாதார தொண்டர்கள் தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நான் சுகாதார அமைச்சராகவிருந்த போது மாவட்ட ரீதியாக சுகாதார திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட உண்மையான சுகாதாரத் தொண்டர்களின் பட்டியல்கள் தயார் செய்யபட்டு அமைச்சர் வாரியத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு மத்திய அரசாங்கத்திற்கும் அப்போது கடமையாற்றிய ஆளுநருக்கும் அனுப்பட்டது. இப்போதும் அந்த பட்டியல் இருக்கிறது.

வடக்கு மாகாண சபையின் இறுதிக் காலப்பகுதியில்தான் மத்திய அரசாங்கத்தினுடைய ஆளணி அனுமதி எமக்கு கிடைக்கப்பெற்றது. எனவே அதனை நிரப்புவதற்கான அவகாசம் எமக்கு இருக்கவில்லை.

எனினும் அப்போது மாகாண சுகாதார அமைச்சராக இருந்த குணசீலனால் அந்த பட்டியல் மாகாண சபையில் முன்வைக்கபட்டு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்க பெற்றதுடன் இனிமேல் ஆட்சேர்ப்பினை மேற்கொள்ளும் போது அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கவேண்டும் என்று வடக்கு மாகாண சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த விடயம் நடைமுறைப்படுத்தபடாமையே இன்று சுகாதார தொண்டர்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு காரணமாகியுள்ளது. அவர்களின் கோரிக்கை நியாயமானது.

போர்க்காலத்தில் சேவையாற்றிய பலர் இன்று தெருவிலே விடப்பட்டிருக்கின்றார்கள். ஏற்கனவே அமைக்கபட்ட பட்டியலுக்கு அப்பால் பலர் இந்த நியமனங்களிற்கு உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த பட்டியலில் 900 பேர் இருக்கும் போது ஏன் 2500 இற்கும் மேற்பட்டோர் குறித்த நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.

பல அரசியல் பிரமுகர்களின் பட்டியல்கள் ஆளுநரின் காரியாலத்திலே இருந்து அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கும் படி அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் முன்னர் சேகரிக்கப்பட்ட தொண்டர்கள் பட்டியலில் இல்லாத பலர் அரசியல் செல்வாக்கினால் உட்புகுத்தபட்டிருக்கின்றார்கள்.

நான் 2010 இல் வைத்திய அதிகாரியாக கடமையாற்றும்போது ஜி.எப்.ஏ.ரி.எம் என்ற திட்டம் நாட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்தின் மூலம் சுகாதாரத் தொண்டர்களை உள்வாங்கி அவர்களை கிராமங்களுக்கு அனுப்பி கள ஆராய்வுகளை மேற்கோள்வதுடன் அவர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்பு தொகையினை வழங்குவதாக அந்த திட்டம் இருந்தது.

அவர்களை தெரிவு செய்வதற்காக நாம் நேர்முகப் பரீட்சையினையும் வைத்திருந்தோம். இதன்போது அப்போது இருந்த ஆளுநரின் செல்வாக்கினைப் பயன்படுத்தி வடக்கைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பட்டியலை நிராகரித்துவிட்டு தங்களுடைய பட்டியலை கொடுத்திருந்தனர். அப்போது நிராகரிக்கப்பட்ட தொண்டர்களே தற்போது வீதியில் நிற்கின்றார்கள்.

2010 ஆம் ஆண்டிலேயே அரசியல் தலையீடு சுகாதார தொண்டர்கள் விடயத்தில் வந்துவிட்டது. அரசியல் தலையீடு காரணமாக போர் காலத்தில் சேவையாற்றிய பல தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும்.

எனவே ஆளுநர் இந்த விடயங்கள் தொடர்பாக கரிசனை கொள்ளவேண்டும் என்பதுடன் நாம் முன்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக அவருடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.