வடக்கு கிழக்கிற்கான சமுர்த்தி வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் சம்பந்தன் ஆதரவாளர்களே நியமனம்: ஏழு மாவட்டங்களும் புறக்கணிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 19, 2019

வடக்கு கிழக்கிற்கான சமுர்த்தி வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் சம்பந்தன் ஆதரவாளர்களே நியமனம்: ஏழு மாவட்டங்களும் புறக்கணிப்பு!

சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனத்திற்காக வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் ஆட்களை பரிந்துரைக்கும்படி கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இரா.சம்பந்தன் தட்டிப் பறித்துள்ளார்.

வடக்கின் ஏனைய ஏழு மாவட்டங்களையும் புறக்கணித்து, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை இரா.சம்பந்தன், சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சில் கையளித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களிற்கு விசேட அபிவிருத்தி நிதி மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்களை சிபாரிசு செய்யும் வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

சமுர்த்தி உத்தியோகத்தர்களில் ஒரு தொகையினரை புதிதாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த எம்.பிக்கள் ஒவ்வொருவரும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த தலை 14 பேரை தமக்கு சிபாரிசு செய்யுமாறு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவித்திருந்தது. கூட்டமைப்பின் 14 எம்.பிக்களும், தலா 14 பேர் வீதமாக 196 பேரை பரிந்துரைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த வாய்ப்பை ஏனைய எம்.பிக்களிற்கு வழங்காமல், இரா.சம்பந்தனே முழுமையான சிபாரிசு பட்டியலை வழங்கியுள்ளார். இது கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களிடம் பகிரங்க அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பு தலைமைக்கு கனடா கிளையின் ஊடாக பணம் வழங்கி முக்கியஸ்தரான குகதாசன், இந்த பட்டியலை சில தினங்களின் முன்னர் அமைச்சர் தயா கமகேயிடம் வழங்கினார்.

சம்பந்தனின் இந்த நடவடிக்கையனால், ஏனைய ஏழு மாகாணங்களையும் சேர்ந்த, தொழில் பெறும் தகைமையுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களின் முன்னர், யாழ்போதனா வைத்தியசாலையில் 135 சிற்றூழியர் வெற்றிடம் ஏற்பட்டபோது, அதை நிரப்ப ஆட்களை பரிந்துரைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பிடம், சுகாதார அமைச்சர் கோரியிருந்தார். அப்பொழுதும், அனைத்து நியமனங்களையும் திருகோணமலையை சேர்ந்த தனது ஆதரவாளர்களிற்கே இரா.சம்பந்தன் வழங்கினார்.


கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், எம்.பிக்கள் அதை கூட்டாக சுட்டிக்காட்டி ஆட்சேபணை தெரிவித்தார்கள்.

“நானும் தேர்தலில் போட்டியிடத்தானே வேண்டும்“ என அப்போது இரா.சம்பந்தன் பதிலளித்திருந்தார்.

இதேவேளை, முன்னைய மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரசியல்ரீதியான வேலைவாய்ப்பை ஈ.பி.டி.பி வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டித்து வந்தது. எனினும், அப்போது, யாழ் மாவட்ட வெற்றிடங்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்களிற்கோ, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களிற்கோ வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.