சர்ச்சைக்குரிய வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் இறுதி நாள் விழா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 13, 2019

சர்ச்சைக்குரிய வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் இறுதி நாள் விழா!

தடைகளை மீறி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இறுதி நாள் பூசை சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று இரவு மடப்பண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

இன்றைய இறுதி நாள் பூஜை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். அத்தோடு,  ஒலுமடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடிகள் வந்திருந்தன.

நெடுங்கேணி வெடுக்குநாறி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.