மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரையில் புற்தரைகளை வெட்டி ஏற்றிக்கொண்டிருந்த உழவு இயந்திரத்தை பொதுமக்கள் மறித்ததனால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பெரியகல்லாறு பொது மயானத்திற்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியிலுள்ள புற்தரைகளை சிலர் உழவு இயந்திரத்தில் வெட்டி ஏற்றியுள்ளனர்.
சாய்ந்தமருதுவிலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்கு ஏற்றுவதாக கூறியே குறித்த புற்தரைகளை அவர்கள் வெட்டியுள்ளனர்.
இதன்போது அங்கு சென்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் சண்.கணேஸநாதன் குறித்த நடவடிக்கையினை தடுத்ததுடன் அப்பகுதியில் ஒன்றுகூடிய மக்களும் அதற்கு எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மண்பிட்டி ஏற்றுவது தடுக்கப்பட்டதுடன் உழவு இயந்திரமும் பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்டது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குள் புற்தரைகள் கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்களினால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு கல்முனை மாநகரசபை முதல்வரும் உறுதுணையாக செயற்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
எந்தவித அனுமதியும் இல்லாமல் புற்தரைகள் அகற்றப்படும்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் களுவாஞ்சிகுடி பொலிஸார் சம்பவத்தினை திசைதிருப்ப முயன்றதாகவும் பிரதேச செயலாளர் அரசாங்க அதிபரிடம் முறையிட்டுள்ளார்