சாக்காடை ஓரமாக வேடிக்கை பார்க்கிறேன்:விக்கினேஸ்வரன்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 23, 2019

சாக்காடை ஓரமாக வேடிக்கை பார்க்கிறேன்:விக்கினேஸ்வரன்?



தற்போது பலர் மக்களுக்குச் சேவை செய்யப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு சுயநல காரணங்களுக்காகவே அரசியலில் நுழைகின்றார்களென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒருவர் தேர்தலில் வெல்ல நுழையும் போது பாரிய தொகை பணத்தைச் செலவிடவேண்டியதாக இருக்கின்றது. வென்றால் செலவழித்த பணத்தைத் திரும்பப் பெறவேண்டிய ஒரு கட்டாயம் அவர்களுக்கு வந்துவிடுகின்றது. ஆகவே தான் சமூகத்தில் ஊழல் மலிந்து காணப்படுகின்றது. படிப்பும்,பண்பும் இல்லாத பணம் படைத்த பலர் வெறும் படாடோபத்திற்காக அரசியலில் நுழைகின்றார்கள். வெற்றி பெற்ற பின் அவர்களின் பந்தாவிற்கு ஒரு அளவில்லை. கண் மண் தெரியாமல் ஆட எத்தனிக்கின்றார்கள். மேலும் மேலும் பணம் சம்பாதிக்கவும் முயலுகின்றார்கள்.

தம்மைத்தகுதி உடையவர்களாகக் காட்ட தமது சாதியை,பிராந்தியத்தை,மதத்தைப் பாவிக்கின்றார்கள். இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி ஆராய்கின்றார்கள் இல்லை. ஆராயுந்திறனும் அவர்களுக்கு இல்லை. இவற்றை விட பலவெளிநாடுகள் எங்கள் அரசியலுக்குள் மூக்கை உள்நுழைக்கின்றன. இதனால் எமது உறுப்பினர்கள் சுய சிந்தை அற்று நடக்கத் தலைப்படுகின்றனர். இவை யாவும் சேர்ந்தே அரசியல் ஒருசாக்கடை என்ற பெயரைப்பெறவைத்துள்ளன.

நான் சாக்கடையின் விளிம்பில் நின்று அதில் தள்ளிச்செல்லப்படும் அசுத்தங்களை அவதானித்துக் கொண்டு இருக்கின்றேனே ஒழிய இதுவரையில் அந்த அசுத்தத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை. இனியும் வைக்காது இருக்க இறைவன் துணைபுரியவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.