நுண்கடன் உள்ளிட்ட பெண்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், எமது அரசாங்கம் தீர்வினை வழங்குமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளீர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றில் பலமான அரசாங்கமொன்று இல்லாத காரணத்தினாலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டது.
இந்தக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சில காலத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது, நாம் வரலாற்று வெற்றியை பெற்றோம்.
இதன் ஊடாக நாட்டிலுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை நாம் கைப்பற்றியுள்ளோம்.
இதற்கு எமது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷதான் பிரதானக் காரணம் என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.
எமது எதிர்க்கால அரசாங்கத்தில் மகிழ்ச்சியான சமூகத்தையும், வளர்ச்சியடைந்த நாட்டையும் உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாக இருக்கிறது.
எமது நாட்டில் பெண் பிரதிநிதித்துவபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். இன்று பெண்களின் கல்வி வீதம் அதிகரித்துவிட்டது.
இதனை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும். நாம் இதற்கான செயற்பாடுகளை என்றோ ஆரம்பித்து விட்டோம்.
இதன் ஊடாகத்தான் அரச இயந்திரத்தை பலப்படுத்த வேண்டும். எனினும், நுண்கடன் போன்ற செயற்பாடுகளால் பெண்கள் இன்று பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் எமது அரசாங்கத்தில் ஒரு தீர்மானத்தை நாம் எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.