காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஆராய கடந்த 10 வருடத்தில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரையில் எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லையென மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கேள்வியெழுப்பியுள்ளார்.
மன்னார் நகர மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே நாங்கள் எங்கள் உறவுகளை தேடுகின்றோம் .
காணாமலாக்கப்படோருக்கு முடிவு வேண்டும். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றாவது சொல்லுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம்.
அவர்கள் இருக்கின்றார்களா? என்பதுதான் எங்கள் கேள்வி. எங்களுக்கு எத்தனை வசதிகளை அரசாங்கம் செய்துதந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளபோவதில்லை.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு இடம்பெறவுள்ளது. அங்கே நம் தமிழர்களின் குரல் கேட்கும்.
இதன்போது அரசாங்கத்திடம் உரையாடுவதாக, அரசாங்கத்திற்கு எச்சரிக்கைவிடுப்பதாக, கேள்விகள் கேட்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவிப்பர். ஆனால் அதற்கு உருப்படியான பதில்களை தருவார்களா? என்பது தெரியவில்லை” என மேலும் தெரிவித்தார்.