லண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக பரோலில் நளினி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கணவர் முருகன் தற்சமயம் பரோல் வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரியவந்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட நளினிக்கு மகள் திருமண ஏற்பாட்டுக்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று முன் தினம் சிறையில் இருந்து வெளியில் வந்த நளினி வேலூரில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் சிறையில் உள்ள நளினியின் கணவர் முருகனும் பரோல் கோருவாரா என கேள்வி எழுந்துள்ள நிலையில் அது குறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், மகளின் திருமணத்துக்காக நளினி பரோலில் வந்திருக்கிறார். சூழ்நிலையைப் பொறுத்து பரோலை நீடிக்கக்கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம்.
நளினியைச் சென்னையில் தங்கவைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. அதனால் தான், வேலூரிலேயே தங்க அனுமதி கேட்டோம்.
நளினியின் கணவர் முருகன், தற்சமயம் பரோல் வேண்டாம் என்று கூறிவிட்டார். மகள் அரித்ரா திருமணத்துக்குள் விடுதலையாகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
அப்படி விடுதலை ஆகாவிட்டால் திருமணத்துக்குச் சில நாட்களுக்கு முன்பாக முருகன் பரோலில் வருவார். அரித்ராவுக்கு நான்கைந்து மாப்பிள்ளைகளை உறவினர்கள் தேர்வுசெய்து வைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர் ஒருவரைத்தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க நளினி விரும்புகிறார்.
மாப்பிள்ளை இலங்கையில் இல்லை என்றாலும் வெளிநாட்டில் வசிப்பவராகக் கூட இருக்கலாம்.
நளினி தான் மாப்பிள்ளையை இறுதியாக தேர்வு செய்வார் என கூறியுள்ளார்