நாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்! கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 18, 2019

நாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்! கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உரிய தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் என கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அம்பாறை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஆகியோருடன் பிரதேசத்திறக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு கலந்துரையாடினார்கள்.

அரச உயரதிகாரிகளுக்கு பதிலளித்த போராட்டகாரர்கள்,

“நாங்கள் இனவாத குழப்பங்களை உருவாக்க இங்கு பட்டினியுடன் அமரவில்லை. இந்த நல்லாட்சி எங்களை ஏமாற்றி விட்டது. சகல வளமும் மிக்க செயலகமாக இந்த செயலகத்தை தரமுயர்த்தி தர வேண்டும்.

அதுவரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். அரச வர்த்தகமானி வரும்வரை காத்திருக்கிறோம். எங்கள் மக்களுக்கு அரசு அவர்களின் உரிமைகளை தர முன்வர வேண்டும் என்றனர்.

இதேவேளை, தொலைபேசி மூலம் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், அவை பலனளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.