தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தவர்களின் நிலை என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 11, 2019

தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தவர்களின் நிலை என்ன?

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற சில நாட்களிற்கு பின்னர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் வீட்டிற்கு வெளியே கூடிய சிலர் தங்கள் பகுதியை கண்காணிப்பதற்கான விழிப்புக்குழுவொன்றை ஏற்படுத்தினார்கள்.

தற்கொலை குண்டுதாரியின் குடும்பத்தவர்கள் மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்

அந்த வீட்டிற்குள்ளிருந்தவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டிருந்தனர். தங்கள் குடும்பத்தவர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதால் அவர்கள் தங்களிற்கு என்ன நடக்குமோ என்ற கவலையிலும் அச்சத்திலும் சிக்குண்டிருந்தனர்.

எனது சகோதரர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்டதால் மக்களின் முகத்தை பார்ப்பது கடினமாகவுள்ளது என தற்கொலை குண்டுதாரியின் சகோதரியொருவர் தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட அஹமட் அலாவுடீனின் சகோதரியே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவேளை அந்த வீட்டிற்குள்ளிருந்து அவரது தாயரின் அழுகுரல் கேட்டது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் மத்தியில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள அதேவேளை குரானை கையில் வைத்திருந்தமைக்காகவும் தேடுதல்களின் போது நாங்கள் கைதுசெய்யப்படுகின்றோம் என முஸ்லீம்மக்கள் தெரிவிக்கின்றனர்.



அரசபேருந்துகள் உட்பட வாகனங்களில் முஸ்லீம்களை ஏற்ற மறுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன

கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் இடம்பெற்ற கார்விபத்து,முஸ்லீம்களிற்கும் மற்றொரு சமூகத்தவர்களிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது.

இலங்கை சனத்தொகையில் பத்து வீதத்திற்கும் குறைவாக உள்ள முஸ்லீம்கள் சிறிய சம்பவங்களிற்காகவும் தங்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்பட்டதை பார்த்துள்ளனர்.கடந்த வருடம் பௌத்த கடும்போக்காளர்கள் இவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொண்டனர்.

அலாவுடீனின் வீட்டில் அவரது குடும்பத்தவர்கள் தங்களில் ஒருவர் எப்படி இஸ்லாமிய தீவிரவாதத்தினால் ஈர்க்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதாக தெரிவிக்கின்றனர்.



அவர்களை பொறுத்தவரை அலாவுதீன் இரக்கமுள்ள இளைஞன்- சட்டக்கல்வி பயின்றவர்.

2017 இல் அவர் தனது பாராம்பரியத்திலிருந்து விலகி காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணநாளில் பாரம்பரிய உடைக்கு பதில் மேலைத்தேய ஆடையை அணிந்தவர் அவர்.

எனினும் அவரின் வாழ்க்கை வேறு பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கான அறிகுறிகள் கடந்த டிசம்பரில் தென்பட்டன.

அவரது தந்தையின் ஏற்பாட்டில் சட்டநிறுவனமொன்றில் கிடைத்தவேலையை அவர் ஏற்கமறுத்தார்.

அதற்கு பதில் அவர் இணையத்தில் தேடுவதில் அதிகளவு நேரத்தை செலவிட்டார் என்கின்றார் அவரது சகோதரி.



அவர் இணையத்திலேயே யோசனைகள் மற்றும் வித்தியாசமான கருத்துக்களை பெற்றிருக்கவேண்டும் என்கின்றார் அவரது சகோதரி.

சமீபத்தில் அலாவுடீனின் 22 வயது மனைவியும் மாற்றமடைந்திருந்தார். குடும்பத்தின் ஏனைய பெண்கள் தங்கள் முகத்தை காண்பிக்கும் ஆடையணிந்த போதிலும் அவர் தனது உடலை முழுமையாக மறைக்கும் ஆடையை அணிய தொடங்கினார்.

எனினும் அவருக்கும் இந்த தாக்குதல்களிற்கும் தொடர்பிருப்பதாக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லலை.

இரண்டு மாதங்களிற்கு முன்னர் அலாவுதீனும் அவரது கர்ப்பிணி மனைவியும் கிழக்கு மாகாணத்தில் வசிப்பதற்காக சென்றனர்.

குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்ற மறுநாள் கொழும்பில் உள்ளவர்களை தொடர்புகொண்ட அலாவுதீனின் மனைவி தனது கணவரை காணவில்லை என தெரிவித்தார்.

அதன் பின்னர் காவல்துறையினர் அவர் சந்தேகநபர்களில் ஒருவர் என அறிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் அவர் கத்தோலிக்க தேவாலயமொன்றில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது இந்த குடும்பத்தினர் கொழும்பில் பல்லின சமூகத்தவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை பரீட்சையை முடித்துக்கொண்டு சகோதரர் ஒருவர் வீடு திரும்பியவேளை வீட்டின் முன்னாள் நின்றிருந்தவர்கள் அவருடன் மூர்க்கத்தமான முறையில் நடந்துகொண்டுள்ளனர்.



காவல்துறையினர் குடும்பத்தில் சிலரை விசாரணைக்காகவும் அழைத்து சென்றுள்ளனர். பொலிஸாரின் காரில் ஏறிய வேளை தற்கொலை குண்டுதாரியின் தந்தை தனது கண்ணீரை துடைத்துக்கொண்டார். அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

நகரின் இன்னொரு பகுதியில் கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட முகமட் அசாம் முபாராக்கின் உறவினர்கள் அவர் வாழ்க்கையில் சந்தித்த தனிப்பட்ட சவால்களே அவரை தீவிரவாதத்தை நோக்கி தள்ளின என தெரிவித்தனர்.

கடின உழைப்பாளியான அவர் இலங்கையி;ன் முஸ்லீம் வர்த்தக பிரமுகர்களில் ஒருவராக தான் மாறவேண்டும் என விரும்பியுள்ளார்.

அவர் வர்த்தக நடவடிக்கையொன்றில் ஈடுபடுவதற்காக பெருமளவு பணத்தை கடன்பெற்றார்,ஆனால் அவரது வர்த்தக முயற்சி தோல்வியடைந்தது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சுமார் 100,000 டொலர் கடனை கொடுக்குமாறு அவரிற்கு பணம் கொடுத்தவர்கள் அச்சுறுத்தல் விடுக்க தொடங்கியுள்ளனர்.

அவரை கொல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்என்கின்றார் முபாராக்கின் உறவினரும்அவருடன் இணைந்து தொழில் புரிந்தவருமான இர்சாட் உசைன்.அவர் தன்னை தேடி யாராவது கடைக்கு வந்தார்களா என அச்சத்துடன் அடிக்கடி கேள்விஎழுப்பினார் என அவர் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கடன் தொடர்பில் உறவினர்களுடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் டிசம்பரில் முபாரக் காணாமல்போயிருந்தார்.



தனது மனைவி மகளுடன் வீட்டிலிருந்து சீற்றத்துடன் வெளியேறியவேளை நான் இறந்துவிட்டேன் என நினைத்துக்கொள்ளுங்கள் என முபாரக் தெரிவித்தார் என அவரது உறவினர் ஒருவர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்

முபாரக்கின் நடவடிக்கை எங்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தியுள்ளது என தெரிவிக்கின்றார் அவரது உறவினரான முகமட் நவீர். எங்கள் அயலவர்கள் எங்களுடன் கதைக்கின்றார்கள் இல்லை எங்கள் முகத்தை கூட பார்க்க மறுக்கின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார்.