வவுனியா – தாவுத் உணவகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

வவுனியா – தாவுத் உணவகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!



வவுனியா கனகராயன்குளம் தாவுத் உணவகத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து இன்று மாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது தாவூத் முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசலகூடத்தினை சோதனையிட்ட சமயத்தில் மலசலகூடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைக்குண்டு, மூன்று மிதிவெடிகள், பதினைந்து தோட்டாக்கள், இரண்டு ஆர்.பி.ஐி. குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் குறித்த நிலையத்தின் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யபட்டுள்ளார்.

அத்தோடு வவுனியா நீதிமன்றிற்கு அருகில் கடமையில் இருந்த இராணுவத்தினர் முச்சக்கர வண்டி ஒன்றை வழிமறித்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் ஜரோப்பிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடவுச்சீட்டு வைத்திருக்காத காரணத்தினால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மைய நாட்களாக இராணுவம் மற்றும் பொலிஸார் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடையாளத்தை உறுதிப்படுத்தாதவர்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள், சரியான தகவல்களை வெளிப்படுத்தாதோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்வதுடன், சிலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு வருவதுடன், சிலர் மீது வழக்குத்தாக்கல் செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.