காணாமல் போனோர் பணியகத்தை மூடத்தயாரா – ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் கேள்வி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 3, 2019

காணாமல் போனோர் பணியகத்தை மூடத்தயாரா – ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் கேள்வி!

ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலக வேண்டும் என்றால், காணாமல் போனோருக்கான பணியகத்தை தொடர்வதில் அர்த்தமில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீரமானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வரும் நிலையிலேயே, பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘காணாமல் போனோருக்கான பணியகத்தை ஜெனீவா தீர்மானத்துக்கு அமைவாகவே உருவாக்கினோம். ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலக வேண்டும் என்றால், காணாமல் போனோருக்கான பணியகத்தை தொடர்வதில் அர்த்தமில்லை. அதனை கலைத்து விடுவது நல்லது.

காணாமல் போனோர் தொடர்பாக, 15 ஆயிரம் முறைப்பாடுகளை இந்தப் பணியகம் பெற்றிருக்கிறது. இதில், 14 ஆயிரம் பேருடைய முறைப்பாடுகளை, ஜனாதிபதி செயலகமே அனுப்பி வைத்திருந்தது.

அவ்வாறாயின், இந்தப் பணியகம் இயக்க வேண்டும் என ஜனாதிபதி விரும்புகிறார் என்றே கருத வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, காணாமல்போனோருக்கான பணியகத்துக்கோ எதிரானவர் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

அவரை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என தோன்றுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக வழிநடத்தப்படக் கூடாது. அதற்கு பதிலாக அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

காணாமல் போனோருக்கான பணியகம், சிங்கள, தமிழ், முஸ்லிம் என, காணாமல் போன அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் கவனித்துக் கொள்கிறது.

நான் இதனைக் கூறும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என் மீது ஏமாற்றம் அடையலாம். ஆனால் நான் இதனைக் கூற வேண்டியுள்ளது. வரும் தேர்தல்களை முன்வைத்து அரசியல் ஆட்டங்களை ஆடக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.