இனியொரு கறுப்பு யூலை வந்தால் முள்ளிவாய்க்காலில் முடியாது… இலங்கை இரண்டாக உடையும்: ரெலோ கடும் எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 26, 2019

இனியொரு கறுப்பு யூலை வந்தால் முள்ளிவாய்க்காலில் முடியாது… இலங்கை இரண்டாக உடையும்: ரெலோ கடும் எச்சரிக்கை!


கலப்பு நீதிமன்ற பொறிமுறையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்டால் மீண்டும் ஒரு கறுப்பு யூலை உருவாகும் என சிறீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா கூறியுள்ள கருத்து தெரு சண்டைக்காரனின் கருத்துப்போல் உள்ளது என கூறியிருக்கும் ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறீகாந்தா, கறுப்பு யூலை அல்ல எதனையும் எதிர்கொள்ள தமிழர்கள் தயார் எனவும் கூறியிருக்கின்றார்.

கறுப்பு யூலை வந்தால் இனி இந்த நாடு இரண்டாக உடைவதிலேயே முடியுமென்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இன்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே என்.சிறீகாந்தா இவ்வாறு கூறியுள்ளார்.

“சில தினங்களிற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த டிலான் பெரேரா தமிழ்தேசிய கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்கின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்டால் மீண்டும் கறுப்பு யூலை ஒன்று உருவாகும் என கூறியிருக்கின்றார். அதன் அர்த்தம் ஐ.நாவில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வோம், இலங்கையில் என்ன வேண்டுமானாலும் செய்வோம், நீங்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான்.



கறுப்பு யூலை என்பது 1983ம் ஆண்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி. அதுவே இந்த நாட்டில் 26 வருடங்கள் நீடித்த மிக மோசமான யுத்தத்திற்கு வழிகோலியது. அந்த யுத்தத்தில் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

தமிழ், சிங்கள தரப்பில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரிழந்தார்கள். பலர் அங்கவீனமாக்கப்பட்டார்கள். பலர் காணாமல் போனார்கள். இவற்றுக்கெல்லாம் மூல காரணம் கறுப்பு யூலை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

டிலான் பெரேராவின் கருத்து சந்தி சண்டியன்களின் கருத்துப்போல் இருக்கின்றது. உண்மையில் டிலான் பெரேரா இலங்கையில் உள்ள மக்களை நேசித்திருந்தால் கறுப்பு யூலை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே அவருக்கு வாய் கூசியிருக்க வேண்டும். ஆனாலும் கூச்ச நாச்சம் இல்லாமல் அவர் அந்த கருத்தை கூறியுள்ளார்.

அவருக்கு நாங்கள் கூறவிரும்புவது, கறுப்பு யூலை அல்ல, அதனைவிட மோசமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ள தயார். தமிழ் மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பின் முன்னால் கறுப்பு யூலை என்பது ஒன்றுமே இல்லை.

கறுப்பு யூலையை காட்டி தமிழர்களை அச்சுறுத்தும் எண்ணம் இருந்தால் அது வெறும் கனவு மட்டுமே என்பதை டிலான் பெரேரா நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். மீண்டும் ஒரு கறுப்பு யூலை வந்தால், அது முள்ளிவாய்க்காலில் முடியாது. அது இலங்கை இரண்டாக உடைவதில் முடியும்“ என்றார்.

இச் சந்திப்பில் ரெலோ அமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், மற்றும் யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.