நாங்கள் தந்த பரிந்துரைகள் எங்கே?; ஐ.நாவில் சமர்ப்பித்தீர்களா?… குப்பை தொட்டியில் போட்டீர்களா?: ஆளுனரை தொண்டைப்பிடியாக பிடிக்கும் சிவாஜி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 30, 2019

நாங்கள் தந்த பரிந்துரைகள் எங்கே?; ஐ.நாவில் சமர்ப்பித்தீர்களா?… குப்பை தொட்டியில் போட்டீர்களா?: ஆளுனரை தொண்டைப்பிடியாக பிடிக்கும் சிவாஜி!

ஜ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பதற்கு பரிந்துரைகளை வழங்குமாறு பகிரங்க அறிவித்தல் விடுத்தீர்கள். உங்கள் கருத்தை ஏற்று, நாங்கள் வழங்கிய பரிந்துரைகள் எங்கே? வடமாகாண சபையில் நிறைவேற்றிய 02 தீர்மானங்களை உங்களிடம் வழங்கினோம். அவற்றை என்ன செய்தீர்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்துங்கள்“

இவ்வாறு ஆளுனரை தொண்டைப்பிடியாக பிடித்துள்ளார்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (30) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது,

“ஆளுநரின் வேண்டுகோளின்படி, ஆளுநரின் செயலாளரினால் வடமாகாணத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண சபையினுடைய முன்னாள் உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள் கடிதம் மூலம் பதிவு தபால் மூலம் விடுக்கப்பட்டிருந்தது.

உங்களின் வேண்டுகோளின் அடிப்படையிலே நாங்கள் வழங்கிய இரண்டு தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை தயவு செய்து ஊடகங்கள் வாயிலாக அறியத் தாருங்கள். ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிக்கவில்லை, உங்கள் கையில் இருக்கின்றன என்றால் அதனை தெரியப்படுத்துங்கள். குப்பைத் தொட்டியில் தான் போட்டீர்கள் என்றால் அதையும் சொல்லுங்கள். அல்லது என்ன செய்துள்ளீர்கள் என்பதை சொல்லுங்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.



ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு உங்களது யோசனைகள் இருந்தால் அதை ஒப்படையுங்கள் என்று நீங்கள் கூறிய அந்த அடிப்படையிலேயே நாங்கள் 3பேர்- மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், நான் ஆகிய மூவரும் சேர்ந்து ஒப்படைந்திருந்தோம்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வடக்கு மாகாண சபையிலே ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தினுடைய பிரதியையும், 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினுடைய பிரதியையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலே ஜக்கிய நாடுகள் சபையினுடைய மேற்பார்வையிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய அந்த தீர்மானத்தையே கையளித்திருந்தோம்.

ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடைய 40 ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி 5 இணைத்தலைமை நாடுகள் உட்பட 36 நாடுகள் கொண்டு வந்த பிரேரணைக்கு 37 ஆவது நாடாக இலங்கை இணைஅனுசரணை வழங்கியிருக்கிறது. இணைஅனுசரணை வழங்கியது தனக்குத் தெரியாது என்று ஜனாதிபதியும் கூறுகிறார். ஜனாதிபதிகளுடைய பிரதிநிதிகளாகச் சென்ற வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகவும் சென்றிருந்த பொழுதிலும் ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது“ என்றார்.