இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கோரினார்.
“இறுதி யுத்தத்தின் போது போராளிகள் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விபரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்பட்டன.
அவரின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் பலமுறை அவர்களை சந்தித்து பேசினோம். இதன்போது அவர் முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விபரங்கள் குறித்து ஏழு இற்கும் மேற்பட்ட கோப்புகளை எங்களிடம் காட்டினார்.
அந்த பட்டியல் தற்போதும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது என நாம் நம்புகின்றோம். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினர்களிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்