“உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - மாவீரர் நாள் கார்த்திகை 27.....(Video) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 26, 2020

“உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - மாவீரர் நாள் கார்த்திகை 27.....(Video)


மாவீரர் என்றால்  யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்றனர். எதிரியை அழித்தவர்கள். அஞ்சாது எதிரியின் பாசறைமேல் படையெடுத்து வெற்றி கண்டவர்கள். உலகவரலாற்றில் எமது மாவீரர்களுக்கு நிகரானவர்கள் வேறு யாருமில்லை. ஆணும் பெண்ணுமாகப் பால் வேறுபாடின்றிப் போரிட்டுச் சாதனை படைத்த மாவீரர்களைத் தமிழீழம் தவிர்ந்த பிறநாட்டில் காண்பது அரிது. கொடியது அகல, விடுதலை கிடைத்திட உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்த மாவீரர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.


தமிழீழ மண்ணெங்கும் நினைவுச்சின்னங்களாய், சிலைகளாய், துயிலுமில்லமாக மாவீரர்கள் குடிக்கொண்டுள்ளனர். அவர்கள் ஈழமண்ணின் விதையாகவும், ஒளிமயமான சுடர் ஒளியாகவும், எம் இனத்தின் பாதுகாப்பு அரணாகவும் இடம் பெறுகின்றனர். எமது தேசமெங்கும் சர்வவியாபியாகி மாவீரர் நிற்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமான மாவீரர்கள் வானளாவிக் கால, நேர, இடம், தூர எல்லைகளைக் கடந்து எமது உணர்வோடும் கனவோடும் கலந்துவிட்டனர்.


மாவீரர்நாள் தமிழீழத்தின் தேசியநாள் என்பதை யாவரும் அறிவர். அன்று நாம் துயிலுமில்லம் சென்று மாவீரர் கல்லறைகளுக்கு விளக்கேற்றுகின்றோம். மனித உடல் கிடக்கும் கல்லறை தெய்வத்தின் இருப்பிடமாகப் நம்பப்படுகிறது. பெரும்பாலான வணக்கஸ் தளங்கள் கல்லறைகளாகவே ஆரம்பித்தன. நாளடைவில் அவை கோயில்களாக மாறிவிட்டன. மக்கள் காட்டும் மதிப்பும், மரியாதையும் அவர்கள் கல்லைரையில் உறைவோர் மீது இயல்பாக கொண்டுள்ள பாசமும், பரிவும் கோயிலாக கல்லறைகள் மாறுவதற்குக் காரணமாகின்றன.


இப்போது மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழத்திலும், ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது.  தமிழீழத்தின் வட, கிழக்கு மண்பரப்பில் இருபத்தைந்து மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 12,635 கல்லறைகளும் 7,365 நினைக்கற்களும் காணப்படுகின்றன. கூட்டுத்தொகை 20,000 இது எப்படி என்றால் வித்துடல் ஒரு இடத்திலும் அதே வித்துடளுக்குரிய நினைவுக்கல்  இன்னோர் இடத்திலும் இருப்பதால்தான். உதாரணத்திற்கு தென்தமிழீழ மாவீரருடைய வித்துடல் கோப்பாய் துயிலுமில்லத்திலும், அவருடைய நினைவுக்கல்   அவர் பிறந்த மண் தரவை மட்டக்களப்பிலும் இருக்கும். இதன் காரணமாக கூட்டெண் 20,000 ஆக உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு மாவீரர் பலருடைய வித்துடல்கள் விசுவமடு, கோப்பாய் போன்ற துயிலுமில்லங்களிலும் விதைக்கப்படடுள்ளன. அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழத்தின் மாவீரர் துயிலுமில்லங்களிலும் நாட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாவீரர் குடும்பத்தினரின் விருப்பப்படியே இப்படிச் செய்யப்படுகிறது. இரு துயிலுமில்லங்களிலும் அவர்களுக்கான தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Dte4tOyW2tI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

மாவீரர் நாள் பாடலின் நான்கு வரிகளை இங்கு தருகின்றோம்.


“உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது

உரைத்தது தமிழீழம் – அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்

நிச்சயம் எடுத்தாள்வோம்”