ஆலய நிர்வாக தெரிவில் ஊர் சேர்ந்து அடிதடி,துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டுப்படுத்திய பொலிசார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 13, 2020

ஆலய நிர்வாக தெரிவில் ஊர் சேர்ந்து அடிதடி,துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டுப்படுத்திய பொலிசார்!

 

வாழைச்சேனை பிரதேச கருங்காலிச்சோலை பேத்தாழையில் இரு கோஸ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுடன் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர். பொலிசார் விரைந்து செயல்பட்டதன் காரணமாக உயிர் சேதம் எதுவுமின்றி பொதுமக்கள் காப்பாற்றப்பட்டதாகவும் கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

கருங்காலிச்சோலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் தொடர்பாக இரு சாராருக்கிடையே நீண்டகாலமாக நிலவி வந்த முறுகல் நிலை நேற்று இரவு (திங்கள் இரவு) குழு மோதலாக மாறியதை அடுத்து காயமடைந்த இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாக முறுகல் நிலை ஏற்பட்டு வந்ததுடன் அவ்வப்போது அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவம் இடம்பெற்ற வேளை பொலிசாரும் அங்கு வரவழைக்கபட்டனர்.

இதேவேளை பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியது.

சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாராரின் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

சிலர் கைது செய்யப்பட்டு பொலிஸ் வாகனத்தில் அழைத்து சென்ற வேளை ஆத்திரமடைந்த நிலையில் பொலிஸ் வாகனத்திற்கு கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தது. பொலிசார் கலகத்தை அடக்க வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தை அடுத்து கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்ததையடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.