விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள கருத்து! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 22, 2020

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள கருத்து!

 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து பராமரிக்கும் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானிய தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “இலங்கையானது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆனால், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் உலகம் முழுவதும் மிகவும் சுதந்திரமாக செயற்பாட்டில் உள்ளன. அத்துடன், இது எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து பராமரிக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியிருந்தது.

‘விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது’ என பிரித்தானிய தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பளித்தது. அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இறுதி முடிவுக்காக பரிந்துரைத்தது.

அதனடிப்படையில், குறித்த தீர்ப்பினை அடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.