தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்தவன் இலங்கை பொலிசை சேர்ந்தவர் என விசாரணையில் தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 6, 2020

தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்தவன் இலங்கை பொலிசை சேர்ந்தவர் என விசாரணையில் தகவல்!

 இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த சிங்கள இளைஞர் இலங்கை காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது



தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (செப்-4) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கும் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதா என இந்திய உளவுத்துறையினர் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் போதை பொருட்கள், கடத்தல் தங்கம் அல்லது சட்ட விரோத ஊடுருவல் போன்ற சட்ட விரோத நடவடிக்கை நடைபெற உள்ளதாக இராமேஸ்வரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலயடுத்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .

அப்போது முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்க போலீசார் முற்பட்ட போது அந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றுள்ளார்.

பின்னர் அவரை மடக்கி பிடித்த மெரைன் போலீசார் இராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் இலங்கை, மொனாராகலை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டார நாயக்க (30) என்ற சிங்கள இளைஞர் என்பது தெரியவந்தது.

மேலும் மெரைன் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பிடிபட்டவர் இலங்கை காவல்துறையை சேர்ந்தவர் என்பதும் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுக காவல் நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து கண்ணாடி இழை படகு ஒன்றில் சர்வதேச கடல் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் எதற்காக இவர் தமிழ்நாட்டிற்கு நுழைந்தார் என்பது குறித்து தமிழ்நாடு கடலோர காவல் குழு பொலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரனைக்கு பின் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருகிறது.

எனவே கைது செய்யப்பட்ட இலங்கை நபர் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக இராமேஸ்வரம் வந்தாரா என்ற கோனத்தில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.