கண்டி – தலாத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட அதிர்விற்கு 3 சம்பவங்கள் காரணங்களாக அமையலாம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டி – தலாத்து ஓயாவை அண்மித்த திகண, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) இரவு 8.34 மணியளவில் சிறியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக விசாரணைக்குழு கண்டிக்கு விஜயம் செய்திருந்தது.
இந்த நிலையில், குறித்த நில அதிர்விற்கு 3 சம்பவங்கள் காரணங்களாக அமையலாம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கற்குவாரியில் வெடி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வு இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லை எனின் சுண்ணாம்பு கற்பாறை உடைந்து வீழ்ந்திருப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விக்டோரியா உள்ளிட்ட அதனை அண்மித்த நீர்த்தேக்கங்களில் ஏற்பட்ட உயர் நீர் அழுத்தம் மூன்றாவது காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிர்வினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
கண்டியின் சில பகுதிகளில் நில அதிர்வு – ஆய்வுகளை மேற்கொள்ளும் விசேட குழுவினர்