பிரித்தானியாவில் இளம் தமிழ் தாயொருவர் தனது குழந்தையை கத்தியால் குத்தி கொன்றதுடன், தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்தது. தாய் ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்று (30) மாலை 4 மணியளவில் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றனர்.
வீட்டில் உயிராபத்தான நிலையில் தாய், மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 35 வயதான தமிழ் தாயும், 4 வயதான மகளுமே பொலிசாரால் மீட்கப்பட்டனர்.
அவர்கள் உடனடியாக ஹெலிகொப்டர் மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 4 வயது குழந்தை உயிரிழந்தது. 35 வயதான தாயார் உயிராபத்தான நிலைமையில் உள்ளார்.
ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிசாரின் கூற்றுப்படி, இந்த சம்பவத்துடன் வெளியார் யாரும் தொடர்புபட்டிருக்கவில்லை. அதனால் யாரையும் தேடவில்லை என்றனர்.
பிரேதபரிசோதனை இன்னும் இடம்பெறவில்லை.