சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் வேறு கட்சியில் சேர்ந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளலாம் எமக்கு அதில் ஆட்சேபணை ஒன்றுமில்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 28, 2020

சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் வேறு கட்சியில் சேர்ந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளலாம் எமக்கு அதில் ஆட்சேபணை ஒன்றுமில்லை!



சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது என சாடியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.


நேற்று (28) மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


 
அண்மைக் காலமாக திரு.சுமந்திரன் அவர்களின் அறிக்கைகளும், பத்திரிகைச் செய்திகளும் எமக்கு அதிர்ச்சி தருவனவாக உள்ளன. அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே அவரது அறிக்கைகள் வெளிவருகின்றன. அவர் மிகவும் தெட்டத் தெளிவாக இதனைச் சொல்லியிருக்கின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது. இவற்றின் அடிப்படையில் எந்தளவுக்கு இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைத் தடுத்து நிறுத்தும் வகையில் இவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள மற்றையோரும் செயற்பட்டிருப்பார்கள் என்று புரிகின்றது.

பொருளாதார அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் என்ற கூற்றில் முரண்பாடு இருக்கின்றது. முன்னர் இக் கூட்டமைப்பினர் தான் அவர் அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாக டக்ளசை வசைபாடினர். இப்போது டக்ளசின் மீது மதிப்பு வந்துவிட்டதா அல்லது அபிவிருத்தி மீது அபிமானம் பிறந்து விட்டதா? உண்மையிலேயே இவர்களுக்கு அபிவிருத்தி மீது அக்கறை இருந்திருக்குமாயின் வடமாகாணசபைக்கு ஒத்துழைப்பை வழங்கி முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு உதவியிருக்க முடியும். ஆனால் எந்தவிதத்திலும் எமக்கு உதவாதது மட்டுமன்றி மறைமுகமாக எதிர்ப்புக்களையே காட்டி வந்தனர். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மை முகம் அண்மைக்காலமாக தெரியத் தொடங்கியிருக்கின்றது. தம்மை வளப்படுத்துவதற்கும், சொத்துக் குவிப்பதற்கும், மாட மாளிகை, சொகுசு கார் என அவர்கள் சிந்தனைகள் ஆகாயத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு மக்கள் மீதோ அல்லது அவர்களின் அபிலாசைகள் பற்றியோ எந்தவித கரிசனையும் இல்லை. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வகை தொகையின்றி அழிக்கப்பட்ட எமது உறவுகளின் குடும்பத்தினர் பற்றி சற்றேனும் சிந்தித்திருந்தால் இவ்வாறான குறுகிய சுயஅபிவிருத்தி நோக்கங்களின் மேல் ஈடுபாடு சென்றிருக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகள் மீதோ எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் தான் என்னைப் பார்த்து அஞ்சுகின்றார்கள் போலத் தெரிகின்றது. அரசாங்க அதிகாரிகளைக் கொண்டு பிழையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள். நடவாத நிகழ்வுகளை நடந்ததாகக் கூறுகின்றார்கள். நிதி நிர்வாகத்தில் இலங்கையிலேயே முதற்பரிசைப் பெற்ற எம்மை நிர்வாகம் தெரியாதவர்கள் என்கின்றார்கள். பொய்களை மூட்டைகட்டி வந்து தமது கூட்டங்களில் அவிழ்த்து விடுகின்றார்கள்.


 
நான் வாராந்தம் பத்திரிகைகளில் வழங்கி வருகின்ற கேள்வி பதில்கள் மக்களுக்கு ஒரு தெளிவூட்டலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனைக் கலைக்கும் முகமாக தேர்தலுக்கு முதல் நாள் என்மீது கூடுதல் அக்கறை கொண்ட சில பத்திரிகையாளர்கள் இணைந்து என்மீது கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாகின்றார்கள் என அறிந்தேன். உண்மையில் கேள்வி கேட்க விரும்புபவர்கள் அல்லது அரசியல் தெளிவை தமது பத்திரிகை வாயிலாகத் தெரியப்படுத்த விரும்புபவர்கள் அவர்களின் கேள்விகளை நான் பதிலளிக்கக்கூடிய வகையில் தேர்தலுக்கு முற்கூட்டியே தொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து தேர்தலுக்கு முன் பதில் கூற முடியாத விதமாகப் பொய்யான அடிப்படையிலான கேள்விக் கணைகளைத் தொடுக்க இருப்பது கோழைத்தனத்தையும் அவர்களின் பயத்தையுமே பிரதிபலிக்கின்றன.

நான் போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அரசியற் தீர்வு பெற்றுத் தருவேன், அரச வேலை பெற்றுத் தருவேன் என்று ஏமாற்றுபவன் அல்ல. ஆனால் எமது நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏற்கனவே புத்திஜீவிகள் பலர் புலத்திலும் நிலத்திலும் எம்முடன் ஒன்றிணைந்து இம் மாற்றத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் அடிப்படையில் மேலும் பலரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். தற்போது தனியாகப் பிரிந்து நிற்கின்ற அல்லது சுயேட்சையாக களமிறங்கியிருக்கின்ற கட்சிகளில் இருந்து பலர் கொள்கை அடிப்படையில் எம்முடன் வந்து இணைந்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது. சிறுசிறு பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் பிரிந்த சக அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் எம்முடன் வந்து விரைவில் இணைந்து கொள்வார்கள்.
இனப் பிரச்சனைக்கான தீர்வு வெறுமனே எமது அரசுடன் பேசுவதால் மட்டும் கிடைத்துவிடும் என நாம் நம்பவில்லை. மாறாக சர்வதேசத்துடன் பேசுவதன் மூலம் அவர்களிற்கு ஒரு அரசியல் தெளிவை ஏற்படுத்தி அதன் மூலமாக வெற்றி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றோம். பல வெளிநாட்டுத் தூதுவர்களுடன் ஏற்கனவே எமது தொடர்புகளை தொடங்கியுள்ளேன்.


 
இம்முறை தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது. எனினும் நீங்கள் அனைவரும் மாலை நேரம் வரை காத்திராமல் விடியற்காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று உங்கள் வாக்குகளை மீன் சின்னத்திற்கும் எமது வேட்பாளர்கள் மூன்று பேருக்கும் செலுத்திவிட்டு அதன் பின்னர் பிற வேலைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எமது தாமதங்கள் சில வேளைகளில் எங்கள் வாக்குகளையே இழக்க வேண்டிய கட்டத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். அத்துடன் இந்த முறை வாக்கு எண்ணும் பணிகள் மறுநாள் காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் இடை நேரத்தில் வாக்குப்பெட்டிகள் மற்றும் செலுத்தப்பட்ட வாக்குகள் என்பவற்றின் பாதுகாப்பை எமது வாக்களிப்பு முகவர்கள் மற்றும் வாக்கெண்ணும் முகவர்கள் மிகக் கவனமாக உற்று நோக்கி ஏதாவது தவறுகள் காணப்பட்டால் அது பற்றி உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றார்