யாழ் மாவட்டத்தில் திங்கள் முதல் பொதுச்சந்தைகள் மீள திறக்கப்படுகின்றன! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 28, 2020

யாழ் மாவட்டத்தில் திங்கள் முதல் பொதுச்சந்தைகள் மீள திறக்கப்படுகின்றன!

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,


யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கௌரவ ஆளுநர் அவர்களும் சில பணிப்புரைகளையும் அறிவுறுத்தல்களையும் விடுத்திருக்கின்றார்.

அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபையினர், உள்ளுராட்சி அதிகார சபையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம் அதனடிப்படையில் தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே திறந்து செயல்படுத்தக்கூடியவாறாக இருக்கும். அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

சில விடயங்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம் அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளது. அத்தோடு பொதுமக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினைபயன்படுத்திக் கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாகிய திருநெல்வேலி சந்தை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என உள்ளூராட்சி சபையினரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையும் அப்பகுதி வீதியினை ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கி யிருக்கின்றோம்.

எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தை நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டுமெனவும்.

கடந்த வாரம் ஏற்பட்ட அம்பன் சூறாவளி தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட காற்றின் தாக்கத்தின் காரணமாக கடந்த 21 ஆம் திகதி மற்றும் அதற்கு பிற்பாடும் தொடர்ச்சியாக யாழ் குடாநாட்டில் காற்றின் தாக்கம் அதிகரித்திருந்தது அதன் அடிப்படையில் சுமார் 130 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளை முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

அவர்களுடைய விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு முற் பணமாக பத்தாயிரம் ரூபா வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது 7குடும்பங்களைத் தவிர அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான குறிப்பாக வாழை, பப்பாசி செய்கையாளர்களுக்கும் அவர்களுடைய இழப்பை நாங்கள் மதிப்பீடு செய்து அவற்றை நாங்கள் விவசாய அமைச்சுக்கும் துறை சார்ந்த பிரிவுகளுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பியுள்ளோம்.

இழப்பு தொடர்பாக நாங்கள் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கின்றோம் குறித்த இழப்புக்கள் தொடர்பில் எமக்கு ஏதாவது பணிப்புரை வழங்கப்படுமிடத்து உடனடியாக அதற்குரிய எடுக்கப்படும்.

சமூர்த்தி 5000 ரூபா நிதி கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தொழிலற்றிருந்த மேலும் தெரிவு செய்யப்பட்ட பட்டியலுக்குரியவர்களுக்கான முதல்கட்ட கொடுப்பனவுகள் யாவும் யாழ் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுவிட்டது.

இது தொடர்பாக ஒரு சில முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன அந்த முறைப்பாடுகளை நாங்கள் விசாரணைக்குட்படுத்தியிருக்கின்றோம் விசாரணை முடிவடைந்த பின்னர் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் அனைத்து சேவைகளும் முழுமையாக இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.