கொழும்பு உட்பட 4 நான்கு மாவட்டங்களில் அனைத்து நடவடிக்கையும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 1, 2020

கொழும்பு உட்பட 4 நான்கு மாவட்டங்களில் அனைத்து நடவடிக்கையும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், மக்களின் வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை ஆரம்பிக்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 11ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை நடத்தி செல்லுதல் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களை திங்கட்கிழமை முதல் நடத்தி செல்ல வேண்டும்.

சேவையின் அத்தியாவசியத்தை கருத்திற்கு கொண்டு அதற்கு அவசியமான திட்டங்களை தற்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களை திறந்து நடத்தி செல்லும் போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ள அவுறுத்தல்களை முழுமையாக கடைபிடிப்பதனை அவதானிக்க வேண்டியது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும்.


திணைக்களம், கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்கள் அழைக்கப்படுவது எந்த பணிக்கு என்பதனை நிறுவனங்களின் பிரதானிகளின் வழிக்காட்டல்களுக்கமைய தீர்மானிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக மக்கள் அவசியமற்ற முறையில் வீதிக்கு வருதல் மற்றும் வேறு இடங்களில் ஒன்று கூடுவதனை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகளில் பணிகளுக்கான பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ள மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய சேவைக்கு செல்லும் நபர்களை தவிர்த்து ஏனைய மக்கள் நோய் தடுப்பு பணிகளுக்காக வீடுகளில் இருந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாரேனும் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்றால் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மாத்திரமே செல்ல முடியும்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவடங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கு மே மாதம் 6ஆம் திகதி வரை முன்னர் காணப்பட்ட, அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படும்.