நாடு முழுவதும் பரவும் வதந்தி தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணை!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 5, 2020

நாடு முழுவதும் பரவும் வதந்தி தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணை!!




நாட்டில் கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாடு முழுவதுமாக ஐந்து நாட்கள் முற்றிலும் முடக்கப்பட உள்ளதாக பரவிவரும் வதந்தி தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், குறித்த வதந்தி மூலம் பொதுமக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உண்மையில் இதுபோன்ற எவ்வித தீர்மானங்களும் அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு அமைவாகவே கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தினை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவ்வாறான நிலை ஏற்படும் போது தற்போது அமுல்படுத்தப்படும் ஊரடங்கு நிலை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறாக ஆதாரமற்ற முறையில் தெரிவிக்கப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி தேவையற்ற அச்ச நிலையை ஏற்படுத்தும் இவ்வாறான நபர்கள் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தகவல் வெளியிடுகையில்,

நாடு முழுவதுமாக முடக்கப்படவுள்ளதாக உண்மைக்குப்புறம்பான தகவல் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பரப்பப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.

உள் வீதிகளில் போக்குவரத்து செய்வது, சந்திப்பை மேற்கொள்வது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்..