இனவாதக் கட்சியைத் தோற்கடிக்க சஜித் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம்- இராதாகிருஷ்ணன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 1, 2020

இனவாதக் கட்சியைத் தோற்கடிக்க சஜித் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம்- இராதாகிருஷ்ணன்

இனவாதத்தைக் விதைத்து வாக்கு வேட்டையாட முயற்சிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட, தலைநிமிர்ந்து வாழ்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதே சிறந்தது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டிலேயே தமிழ் முற்போக்குக் கூட்டணி உதயமானது. தேர்தலை அடிப்படையாகக்கொண்டு அல்லாமல், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே நாம் இணைந்து பயணித்தோம். மேற்படி கொள்கையின் அடிப்படையிலேயே இன்றும் எமது பயணம் தொடர்கின்றது.

அடுத்த பொதுத் தேர்தலிலும் நாம் இணைந்தே போட்டியிடுவோம். அந்த நற்செய்தியை தெரிவிப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றேன்.

கிடப்பில் போடப்பட்டிருந்த 4 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை திகாம்பரம் மலையகத்தில் செயற்படுத்தினார். அதுமட்டுமல்லாது மேலும் பல வீட்டுத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது விடயத்தில் அவரின் செயற்பாடு பாராட்டத்தக்கது.

அதேபோல் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்து நானும் பல சேவைகளை செய்துள்ளேன். மலையகத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு இன்று தெரிவாகும் மாணவர்களின் விகிதத்தை ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியவரும். குறிப்பாக ஹற்றனில் இருந்து மட்டும் 250 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதேவேளை, இனவாதம் பேசி வாக்குக் கேட்பதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்துக்கோ அல்லது ஹிஸ்புல்லாவுக்கோ வாக்களிக்கவில்லை. சிங்கள, பௌத்தரான சஜித்துக்கே வாக்களித்தனர். இது புரியாமல் மாறுபட்ட கோணத்தில் வாக்குகளுக்காக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழில் தேசிய கீதம் பாட தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஜெனிவாவிலும் தமிழர் விவகாரம் ஊதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சலுகைகளுக்கு அடிபணிந்து வாக்களிப்பதைவிட தலைநிமிர்ந்து வாழவே வாக்களிக்கவேண்டும். அதற்கான ஆதரவையே தமிழ் முற்போக்குக் கூட்டணி கோருகின்றது” என்று தெரிவித்தார்.