ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு; பஸ் கிளீனர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 22, 2020

ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு; பஸ் கிளீனர் கைது

வடலூரில் ஒருதலைக்காதலால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரோடு எரித்த பஸ் கிளீனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெய்வேலி புதுநகர் 28வது வட்டத்தை சேர்ந்தவர் விக்டர்ஜான். இவருடைய மனைவி சலோமியா (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வடலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சலோமியா ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விக்டர்ஜான் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார்.

சலோமியா தினந்தோறும் காலையில் தனியார் பஸ்சில் வடலூருக்கு வந்து செல்வார். அப்போது அவருக்கும் தனியார் பஸ் கிளீனரான குமராட்சியை சேர்ந்த ரத்தினசபாபதி மகன் சுந்தரமூர்த்தி (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நட்பாக பழகி வந்த சலோமியாவை, சுந்தரமூர்த்தி ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் சுந்தரமூர்த்தி தனது காதலை சலோமியாவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்று கூறி, அவரது காதலை ஏற்க மறுத்ததோடு, சுந்தரமூர்த்தியின் நட்பை துண்டித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, சலோமியாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை சலோமியா வீட்டில் இருந்து வடலூருக்கு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையத்தில் இருந்து தான் பணி புரியும் நிறுவனம் அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு சென்றார். அப்போது அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நடந்து சென்ற சலோமியாவை சுந்தரமூர்த்தி வழிமறித்து, திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், சலோமியா மீது எரிந்த தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர், சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள், சுந்தரமூர்த்தியை பிடித்து தர்மஅடி கொடுத்து, வடலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது பற்றி அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்தார். மேலும் இது தொடர்பாக சலோமியாவிடமும் அவர் விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.