மத்தியவங்கி மோசடி- சுயாதீன நீதிமன்றத்தை ஸ்தாபிக்க சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 18, 2020

மத்தியவங்கி மோசடி- சுயாதீன நீதிமன்றத்தை ஸ்தாபிக்க சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை


மத்திய வங்கி மோசடி குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக சுயாதீன நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும்  கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வில் மத்திய வாங்கி மோசடி குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதானவிவாதத்தை ஆரம்பித்து உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “சாட்சியங்களின் உண்மைத்தன்மை, சாட்சியங்களை முன்வைக்கும் கணக்காய்வாளர்களின் உண்மைத்தன்மை, அவர்களது தகைமை தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டிய இடம் நீதிமன்றமே.

2005 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை நாணய சபை நேரடி கொள்வனவு நடைமுறையை பின்பற்றியது. ஏல நடைமுறை 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை பின்பற்றப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டே கணக்காய்வாளர்கள் இந்த காலப்பகுதியை இரண்டாகப் பிரித்துள்ளனர். அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கொடுக்கல் வாங்கல் ஊடாக சந்தை செயற்பாடுகளுக்கும் நாட்டின் வட்டி வீதத்திற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அரச நிதி நிர்வாகத்தில் பேணப்படக்கூடாத உறவுமுறை மீதான கரிசனை மற்றும் அதிகாரிகளின் தலையீடு என்பன இந்த முறிகள் விநியோகத்தின் போது காணப்பட்டமை உறுதியாகியுள்ளது.

ஆகவே, இந்த நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக ஆராயப்பட வேண்டும். மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

மேலும் நாட்டு மக்கள் சார்பில் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அசாங்கம் இழந்த பணத்தை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை விடுத்தார்.