தமிழீழத்தில் காணாமற்போனோரை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 29, 2020

தமிழீழத்தில் காணாமற்போனோரை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் உயிரிழப்பு

தமிழீழத்தில் சிறிலங்கா படையினராலும் ஒட்டுக்குழுக்களாலும் வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்டவர்களை  காணாத நிலமையிலேயே இதுவரை 38 உறவுகள் மரணமடைந்துள்ளனர் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல்போனோர் அமைப்பு தெரிவிக்கின்றது.

இவர்களின் மரணத்திற்கு சிறிலங்கா அரசும் படைகளும் ஒட்டுக்குழுக்களும் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு உள்ள நிலையில், அவர்கள் மௌனமாக இருந்து வருகின்றமை காணாமற்போனோரின் உறவினர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல்போனோர் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கில் காணாமல்போனோரை கண்டறிந்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த பின்பு இதுவரை 38 பேர் தமது உயிரை இழந்து விட்டனர். இருப்பினும் காணாமல் போன எவரும் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு ஏற்படும் மரணத்திற்கு காரணம் நீதி வழங்களில் ஏற்படும் தாமதமே பிரதான காரணம் , இதுவே உறவுகளைத் தேடும் உறவுகளின் மரணத்திற்கு அடிப்படையாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகரத்தினம் மகேஸ்வரி, பாவிலு சந்தியோகு, மரியான் சரோரூபன், குருஸ், கனகரத்தினம் மகேஸ்வரி, வைத்தியலிங்கம் யோகரட்ணம், ஈஸ்வரன் உருத்திராதேவி, துரைசிங்கம் ஈஸ்வரி, சிதம்பரப்பிள்ளை யோகராசா,

அரசியல் கைதியான தனது கணவனை விடுதலை செய்யக்கோரி போராடிய ஆனந்தசுதாகர் யோகராணி ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அன்ரன் அல்பிரட், செபநாயகம் மரியமலர், செபஸ்ரியான்பிள்ளை ஆரோக்கியநாதன், ச.விஜயலட்சுமி, கோணமலை பொன்னம்பலம், வேலு சரஸ்வதி, செபமாலைமுத்து திரேசம்மா ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.

திருகோணமலை மாவட்டத்திலும் சுந்தரம்பிள்ளை அருந்தவம், தவரட்ணம் பத்மாவதி ,இராமன் கமலம், வீரகத்தி அமிர்தலிங்கம், சொக்கன் பரமேஸ்வரி, சுந்தரம் லெட்சுமிப்பிள்ளை, நாகராசா சிவசோதி ஆகிய 7 உறவுகள் மரணமடைந்துள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பரமசிவம் தெய்வஈஸ்வரி, மகேந்திரன் உதயராணி, லவநீதன் இளவரசி, தம்பிமுத்து அமரசிங்கம், அழகிப்போடி சந்திரசேகரம், சந்திரசேகரம் ஞானசௌந்தரி ஆகிய 6 உறவுகள் மரணமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கனகரத்தினம் காந்தமலர், சபாரத்தினம் மனோன்மணி, தெய்வேந்திரன் இந்திரா, நாகராசா சிவமணி, சாமிதம்பி திரவியம் ஆகிய 5 உறவுகள் மரணமடைந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் கந்தையா அரியரத்தினம், அரியதாஸ் புவனேஸ்வரி ஆகிய இரு உறவுகளும் மரணமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாசிலாமணி புஸ்பராணியும் மன்னார் மாவட்டத்தில் ஜசிந்தா பீரிஸ் என 38 உறவுகள் மரணமடைந்தனர்.

இவை எமது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மட்டுமே. எமது பதிவுகளுக்குட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டியதை விட அதிகமாக இருக்குமென கணிப்பிடுகின்றோம். – என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்துமா என தாயகத்தில் உள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.